ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி விலையில் மாற்றம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2019

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி விலையில் மாற்றம்!



(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைகளின் சுத்தம், சுகாதாரம், இறைச்சி விலை, கால் நடைகளை மனிதாபிமானத்துடன் நடாத்துதல் போன்றவை மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட சந்திப்பில் சுத்தம், சுகாதாரம் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் தெளிவான கொள்கைகளையும் அதனை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும், கண்கானிக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.ஷிஹாப்தீன் விளக்கமளித்தார்.

ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்களும், மாட்டு வியாபாரிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பகுதிகளில் காணப்படும் இறைச்சிக் கடைகளை முறையாகவும், சுத்தமாகவும் பேணுதல், நிறுவை தராசுகளை, உடனடியாக பரிசோதனைக்குட்படுத்துதல் மற்றும் தற்போது எண்ணூறு ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு கிலோ இறைச்சியை இம்மாதம் டிசம்பர் 10ஆம் திகதி முதல் எலும்பில்லாமல் ஒரு கிலோ இறைச்சி எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு விலைத்தளம்பல், கால்நடைகளின் தட்டுப்பாடு, இறைச்சிக்கடை நடாத்துனர்கள், கால்நடை வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள பிரதேச சபையின் கண்காணிப்பில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இப் பிரதேச மக்களின் நலன்கருதி எலும்பற்ற ஒரு கிலோ இறைச்சியினை எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்துள்ள இறைச்சிக்கடை நடாத்துனர்கள், கால்நடை வியாபாரிகள் ஆகியோர்களுக்கு பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி சபையின் பிரதிநிதிகள் சார்பாகவும், இப் பிரதேச மக்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு, விலையில் யாரேனும் சபையுடன் கலந்தாலோசிக்காது உயர்த்தினால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

இச்சந்திப்பில் பிரதேசசபையின் உப தவிசாளர் யூ.எல். அஹமட், உறுப்பினர்களான எம்.பி.எம். ஜெளபர், ஏ.ஜி.அமீர், எஸ்.ஏ.அன்வர், எம்.ஐ.ஹாமித் லெப்பை, எம்.பி. சித்தி ஜெஸீமா, எம்.பி.ஜெமீலா, ஏ.எல்.ஜெஸ்மின் பீவி, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment