ஜனாதிபதித் தேர்தலின்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசுக்கு கூறினேன் கோட்டா வெல்வது உறுதி என்றும் அவருக்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் படியும்.
இவ்வாறு தெரிவித்தார் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சியான உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இத்தனைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ரணிலை விட மஹிந்தவை பெரிதும் மதிக்கக் கூடியவராக இருந்தார்.
கல்முனை பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆடும் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்பதில் உறுதியாக இருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மஹிந்த பக்கம் வந்தால் தானும் வரத்தயார் என்ற நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்தார்.
அரசியல் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதுதான். நாம் எடுக்கும் முடிவு என்பது சில நேரம் நமக்கும் படு தோல்வியை தரலாம், சிலவேளை பெரு வெற்றியை தரலாம்.
எதையும் தாங்குபவன்தான் உண்மையான அரசியல்வாதி. நாம் எடுக்கும் முடிவு நமக்கு தோல்வியாக அமைந்தாலும் சமூகத்துக்கு வெற்றியாக இருந்தால் அது நமக்கும் வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் தேர்தல் காலத்தில் எனது அழைப்பை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கோட்டாவுக்கு ஆதரவளித்திருந்தால் இந்நேரம் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சராகியிருப்பார்.
கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் விமோசனம் கிடைத்திருக்கும். நிச்சயம் கோட்டா வெல்வார் என்று நன்கு தெரிந்தும் ஹரீஸ் முடிவெடுக்காமை மூலம் அவர் அமைச்சர் அஷ்ரபின் நேரடிப்பாசறையில் வளர்ந்தவர் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்.
சிலவேளை கோட்டா தோற்றிருந்தாலும் ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். அவருக்கு அமைச்சு கொடுக்க கூடாது என ஹக்கீம் தடை போட்டிருப்பார். ஆனாலும் ஹரீஸுக்கு அமைச்சு பதவி தூசுக்கு சமன் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம்.
உண்மையில் ஹரீஸ் இது விடயத்தில் முடிவெடுப்பதில் கோழையாகியமை கவலை தருகிறது. வெற்றியோ தோல்வியோ சமூகத்துக்காக துணிச்சலாய் முடிவெடுப்பது தலைவர் அஷ்ரபின் பாணி. அதனை நான் எப்போதும் பின் பற்றுகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இனியாவது தலைவரை பின் பற்றி நல்ல முடிவெடுக்க வேண்டும். ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசால் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்கள் போதும்.
No comments:
Post a Comment