இந்தியா, இலங்கை ஜனாதிபதித் தேர்தலை மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாகவும், கடந்த காலங்களில் சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமையினால், இந்தியாவிற்கு தொடர்ந்தும் இலங்கை மீது சந்தேகம் நிலவுவதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ, அவரது காலகட்டத்தில் மிக தெளிவாக இருந்ததாக கூறிய கருணா அம்மான், அதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலேயே இந்திய மத்திய அரசாங்கம் இருக்கின்றது எனவும் கருணா அம்மான் கூறினார்.
இதேவேளை, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் 40000 வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை புனர்வாழ்வளிக்க இந்தியா உதவிகளை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், நிதியுதவிகளை வேகமாக வழங்கும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தை வகித்தமையினால், சீனா அரசாங்கத்தின் தேவை இலங்கைக்கு அன்று அத்தியாவசியமாக காணப்பட்டதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டார்.
நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனேயே அன்றைய இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கைகோர்த்ததே தவிர, இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளை எதிர்ப்பதற்காக சீனாவுடன் இணையவில்லை எனவும் அவர் கூறினார்.
பிபிசி தழிழ்
No comments:
Post a Comment