யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று தடவைகள் விமான சேவைகளை நடத்த எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனம் முன்வந்துள்ளதோடு, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இதற்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டபோது, அலையன்ஸ் எயார் நிறுவனமானது, சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விசேட விமான சேவையொன்றை நடத்தியது.
இது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானமாகும். இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் வணிக விமான சேவைகள் எதிர்வரும் 11ஆம் திகதி தொடங்குமென, அலையன்ஸ் எயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இவை கூடிய விரைவில் தினசரி சேவையாக மாற்றப்படுமென, அலையன்ஸ் எயார் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து முற்பகல் 10.35 மணிக்கு புறப்படும் விமானம், யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12.00 மணிக்கு தரையிறங்கும். இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம் சென்னையில் பகல் 2.10 மணிக்கு தரையிறங்குமெனவும் அலையன்ஸ் எயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment