மாலைதீவு தூதுவர் உமர் அப்துல் ரஸ்ஸாக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (01) உயர் கல்வி அமைச்சில் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான உயர் கல்வி, நீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு முதலான விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கை பல்கலைக்கழகங்களில் சந்தர்ப்பமளிக்கும் வரைமுறைகளுக்கு அமைவாக மாலைதீவு மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்க கலந்தாலோசிக்கப்பட்டன.
மேலும், இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களில் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் முதலான துறைகளில் அடிப்படை தகைமைகளை பெற்ற மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
மாலைதீவு அரசாங்கம் இலங்கை பல்கலைக்கழக கிளையை அமைப்பதற்கு அந்நாட்டில் ஒரு தீவை வழங்க முன்வந்துள்ள நிலையில், இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் கிளையை மாலைதீவில் அமைப்பதற்காக இரு நாடுகளினதும் துறைசார்ந்த உயரதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையும் மாலைதீவும் இத்துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு அமைவாக ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுதவிர நீர் வழங்கல், சுகநல பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு முதலான விடயங்களில் இரு நாடுகளுக்கிடையிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.
இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, அமைச்சின் மேலதிக செயலாளர் எல். மங்கலிகா, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர் மற்றும் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment