வடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்கள சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்துக்கு நேற்று திடீரென 118 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும், ஏனைய 87 பேரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியமுடிகின்றது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் உள்ள நில அளவைத் திணைக்கள அலுவலகங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்காகப் பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதில் விண்ணப்பத்தவர்களுக்கு கொழும்பில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.
அந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று பலரும் காத்திருக்கும் நிலையில் நேற்று 118 பேருக்குத் திடீரென நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தலா 35 பேரும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 பேரும், மன்னார் மாவட்டத்துக்கு 13 பேரும், யாழ்ப்பாணத்துக்கு 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேர்முகத் தேர்வுக்குச் சென்று நியமனத்துக்காகக் காத்திருந்தவர்கள் இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் அரசியல் கட்சியொன்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பட்டதாரிகளுக்கு அரச நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த முதலாம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்குத் தெற்கு இளைஞர்களை நியமிக்கும் செயலைத் தமது அரசு முழுமையாகத் தடுத்து நிறுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment