காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்டமூலம் நேற்று இரவு 7 மணிக்கு மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் மின்னணு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார்.
அமித்ஷா பேசியதாவது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள். வெறும் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சட்டப்பிரிவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஜம்மு காஷ்மீரில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை.
தேவைப்பட்டால், ஜம்மு காஷ்மீர் மக்கள் நலனுக்காக சிறப்பு திட்டங்களை அறிவிப்போம். வரும் 5 ஆண்டுகளில் காஷ்மீரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். வளர்ச்சிக்கு பின்னரே சட்டப்பிரிவு 370 எத்தகைய தடையை ஏற்படுத்தியது என்பது தெரியும்.
காஷ்மீர் இந்தியாவுடன் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தியிருந்தது. காஷ்மீர் பற்றி பேசும்போது எல்லாம் பிரதமர் மோடி நினைவுக்கு வருவார். பாகிஸ்தான் குரலில் பேசும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.” இவ்வாறு அவர் பேசினார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் லோக் சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது. முக்கியமாக திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். காங்கிரஸ், திமுக, ஜேடியு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்தன. பாஜக, அதிமுக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி மசோதாவை ஆதரித்தன. திரிணாமுல் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
No comments:
Post a Comment