மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (28) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து வந்த நீண்டகால குறைபாடொன்றை நிவர்த்தி செய்யும் வகையில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாட்டுத் தொகுதிக்கு 165 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
28 கட்டில்களைக் கொண்ட இவ்வாட்டுத் தொகுதி வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
எமது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைமையானது பெறுமதி வாய்ந்த ஒன்றாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும் எமது நாட்டின் சுதேச மருத்துவ முறைமையின் பெறுமதியை மிகைக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய வாட்டுத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.
வட மத்திய மாகாண சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் சமன் பந்துலசேன, வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ், திம்புலாகலை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த மாறசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment