ஆயுத பலம் இன்றிய நிலையில் அரசியல் தீர்வு வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடுவது தவறான நிலைப்பாடாகும். அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஓரிரு மாதங்களுக்குள் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் திட்டங்கள் தீட்டப்படவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அவ்வாறு அழித்தால் அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மத்தியில் இருப்பவர்கள் மறப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் போல் தெரிகிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் அவர் கூறினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக கௌரவமாக சுயமரியாதையுடன் பாதுகாப்புடன் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம்.
சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவு ஏற்படவில்லை. உரிய நேரத்தில் உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்கின்ற பொழுது அதை முழுமையாகப் பயன்படுத்தாவிட்டால் அதனுடைய விளைவுகள் சில நேரங்களில் பாரதூரமாகிவிடும்.
ஜனாதிபதி பிரேமதாச உட்பட மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை. அவை நிறைவு பெற வேண்டும்.
இந்தப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஏகமனதாக பாராளுமன்றில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கருமங்கள் நிறைவேற்றப்பட்டு அதிலும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு தற்போது மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஆனால் அவை இறுதித் தீர்மானமாக கொண்டுவரப்படுமா? எனத் தெரியவில்லை. இதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் கருமங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு பற்றி பேசுகின்றனர். சகல முயற்சிகளையும் தாமதிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
வட மாகாணத்தில் பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன.
நாங்கள் சரித்திர ரீதியாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை முன்னெடுத்த நிலங்களில் வேறு இனத்தவர்கள் குடியேற்றப்படுவதை காண்கின்றோம். இவ்வாறான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது.
இவைகள் பாரதூரமான விடயங்கள் இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றுக்கு மிக விரைவில் முடிவு காண்போம். விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டது.
அங்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரும் கூட இன்று ஆயுதம் ஏந்தியவர்கள் எமக்காக பேச முடியாத சூழ்நிலையில் அவற்றைப் பயன்படுத்தி தீர்வை தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது.
யுத்தம் நடைபெற்ற போது இந்தப் பிரச்சினைகளை தீர்ப்போம் என சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கம் வாக்குறுதியை வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நம்பியே விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேசம் இலங்கை அரசாங்கத்துக்குப் பல்வேறு வழிகளில் உதவியது.
ஆனால் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. அவற்றை நிறைவேற்றக் கூடிய நிலைமை இருப்பதாக தெரியவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
No comments:
Post a Comment