முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் ஹோட்டல் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது உபகரணங்கள் ஒருதொகுதி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் அளம்பில் பகுதியில் உள்ள புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தொலைத்தொடர்பு கருவி உள்ளிட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
அளம்பில் பகுதியில் இயங்கிவந்த தனியார் ஹோட்டல் ஒன்று படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி பாவனைக்கு உட்படுத்திய பொருட்களை படையினர் மீட்டுள்ளார்கள்.
இதன்போது இராணுவ சப்பாத்து 2 சோடி, கமா சீருடை 1, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் அட்டைகள், கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
No comments:
Post a Comment