குழந்தைச் செல்வங்கள், இறைவன் நமக்குத் தந்திருக்கும் பெரும் அருட்கொடையாகும். குழந்தைகள் பெற்றோர்களின் கண் குளிர்ச்சியாவார்கள். எனவே, நாட்டினதும், சமூகத்தினதும் எதிர்காலம், வளர்ந்து வரும் இக்குழந்தைகளில்தான் தங்கியுள்ளது என, அஷ் ஷெய்க் ஏ.ஜீ.எம். பஹ்மி (ஸஹ்தி) தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் மினுவாங்கொடை - கல்லொழுவை, "மக்தப் தாருல் அர்கம்" நான்காவது வருட மக்தப் பரிசளிப்பு விழா, (23) சனிக்கிழமை காலை, கல்லொழுவை "ஹில் சைட்" வரவேற்பு மண்டபத்தில், தாருல் அர்கம் மக்தப் அதிபர் அஷ் ஷெய்க் எம்.எப்.எம். பாஹிருத்தீன் (தீனி), தாருல் அர்கம் மத்ரஸா அதிபர் அஷ் ஷெய்க் எம்.எச்.எம். ஸமீல் (தீனி) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.
குருநாகல் மக்தப் மத்திய நிலையம் (6 இன்) மேற்பார்வையாளரும், குருநாகல் நகர அ.இ.ஜ.உ. செயலாளருமான அஷ் ஷெய்க் ஏ.ஜீ.எம். பஹ்மி (ஸஹ்தி) விசேட பேச்சாளராகக் கலந்துகொண்டு இங்கு உரை நிகழ்த்தினார். அஷ் ஷெய்க் பஹ்மி தொடர்ந்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
குழந்தைச் செல்வங்கள் ஒவ்வொரு பெற்றோர்களினதும் அமானிதங்கள். அந்தவகையில் இவர்கள் மிகவும் கவனமாக வளர்க்கப்படவேண்டியவர்கள். குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. பெற்றோர்கள்தான் இதுபற்றி வகை சொல்கின்றவர்களாவர். பெற்றோர்களே நாளை மறுமையில் குழந்தைகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்கள்.
மக்தப் என்பது, குழந்தைச் செல்வங்களுக்கு சிறந்த பாதைகளைக் காட்டிக் கொடுக்கும் ஒரு உன்னதமான கலைக்கூடமாகும். ஆலிம்களாக, ஹாபிழ்களாக வரமுடியாவிட்டாலும், இங்குள்ள பாடத்திட்டங்கள், குழந்தைகளின் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது.
உலகில் எப்படியும் வாழலாம் என்று நாம் நினைக்கக்கூடாது. எமது வாழ்க்கையோடு குழந்தைகளின் வாழ்க்கையையும் இறைவனுக்குப் பொருத்தமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுத்தரும் பயன்மிக்க விதத்திலான நடைமுறைகள் தான், மக்தப் கல்விக்கூடங்களில் போதிக்கப்படுகின்றன. இதுதான், மக்தப்புடைய சிறப்பம்சமாகும் என்றார்.
கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.எம். நிஸார் (பாரி), மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.ஏ. கப்பார் ஹாஜி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரீ.டப்ளியூ.ஏ. வஹ்ஹாப், எம்.ஜீ.எம். சியாத், கல்லொழுவை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஏ.எச்.எம். பரீஸ் உள்ளிட்ட கல்லொழுவை அ.இ.ஜ.உ. பிரதிநிதிகள், உலமாக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மக்தப் மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் இதன்போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment