உலகில் தம்மால் அங்கீகரிக்கப்படாத, தமக்கு விசுவாசமற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா படையெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெனிசுவேலாவிற்கு நேர்ந்த நிலை எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஏகாதிபத்திய தலையீட்டை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வெனிசுவேலாவில் மக்கள் ஏற்படுத்திய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பல நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாமும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளோம்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதாக குரலெழுப்பி வரும் அமெரிக்கா, தேர்தலின் மூலம் சாதாரணமான முறையில் ஏற்படுத்தப்பட்ட வெனிசுவேலா அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படலாம். எனவே, இப்பொது பிரச்சினைக்கு அனைவரும் கைக்கோர்த்து எதிர்ப்பை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment