ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில், பொதுவான கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானவெதுவும் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடன் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
ஆனால் இக்கலந்துரையாடலில் இரு கட்சிகளைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் காணப்பட்ட முரண்பாடுகளால் எந்த விதமான ஆக்கபூர்வமான தீர்வுகளும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று வரையில் பொதுச் சின்னமோ, கூட்டணியின் பெயரோ அல்லது அக்கூட்டணிக்கான கொள்கையோ உருவாக்கப்படவில்லை.
இதனால் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மூவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என டலஸ் அழகபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment