விசா மோசடி செய்து படிக்கச்சென்ற குற்றச்சாட்டில் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை வழங்கி அமெரிக்காவிற்கு மாணவர்கள் வருகை தருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்து, அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 2,49,763 மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். அதே ஆண்டில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 4,81,106 ஆக உள்ளது.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறி’ வைக்கப்பட்டது. இதில் சுமார் 130 மாணவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 129 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.
கைதாகியுள்ள மாணவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள 202-322-1190 மற்றும் 202-340-2590 எண்களைக் கொண்ட ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment