பேச்சுவார்த்தை தோல்வி கண்டால் இலங்கை வரலாற்றில் பேசப்படும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பேன் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

பேச்சுவார்த்தை தோல்வி கண்டால் இலங்கை வரலாற்றில் பேசப்படும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பேன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக பிரதமரிடம் நாளை (01) பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொள்ளவுள்ளது. 

இதில் ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவை கம்பனிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத பட்சத்தில் பாராளுமன்றத்தில் அனைத்து பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு நிரந்தரம் என்ற மக்கள் சக்தியை வலியுறுத்தி நியாயமான சம்பளத்தை பெரும் வரை இலங்கை வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு 02 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஹட்டன் நகரில் முன்னெடுக்க கூட்டணி கட்சிகளை சார்ந்த மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோர் அமரவிருக்கின்றனர். 

இதற்கு மக்கள் அனைவரும் அணிதிரண்டு வர வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் வேண்டுக்கோள் விடுத்தார். 

நோர்வூட் நகரில் கலாச்சார மண்டபத்தில் இன்று (31) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற சம்பளம் தொடர்பிலான விழிப்பூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் திகாம்பரம் அங்கு உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பாக வழங்கப்பட்ட அடிப்படை சம்பளம் 500 ரூபாயுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு 60 ரூபாயும், ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவையும் இணைத்து 700 ரூபாயாக இது 40 வீத சம்பள உயர்வு என சொல்லி அணைவரையும் முட்டாளாக்கி விட்டார்கள். 

சம்பளமாக கிடைத்ததையே மாற்றிவிட்டு இரண்டு கொள்ளைக்கார கூட்டம் இந்த நாடகத்தை அரங்கேற்றி நம்மை மடையர்களாக்கி விட்டனர். 

வயிறுள்ள அமைச்சர் பதுளைக்காரர் சொல்லுகிறார் 140 ரூபா யாருக்கும் கிடைக்கவில்லை என்று தோட்ட தொழிலாளர்கள் நீங்கள் எல்லோரும் கடந்த காலங்களில் வேலைக்கு போகவில்லையா, சோம்பேறியாக இருந்தீர்களா? சோம்பேறிகளுக்கு கிடைத்திருக்காது. ஆனால் இந்த தொகை தொழில் செய்தவர்களுக்கு கிடைத்துள்ளது. 

தொழில் செய்யாமல் 20 வீதமானவர்கள் இருந்தாலும், மிகுதி 80 வீதமானவர்கள் தொழில் செய்பவர்கள் இது அணைவருக்கும் தெரியும். 

எப்படி எல்லாம் “பிளேட்டை” மாற்றுகின்றார்கள். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு நான் தான் பச்சை தமிழன் என்று சொல்லிக்கொண்டு தோட்ட தொழிலாளியையும் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் கஷ்டத்தில் போட்டு ஏமாற்றிவிட்டனர். 

என்ன காரணம் என்றால் இவர்கள் நினைக்கின்றார்கள் நாம் எதை செய்தாலும் மக்கள் எம்மோடு தான் இருப்பார்கள் என்பது தான், நான் தவறு செய்தாலும் என்னை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு கட்சி தலைவர் என்றால் அத் தலைவர் தான் கடவுள் என்று நினைக்கின்றீர்கள். 
நாம் அந்த காலத்திலிருந்து 200 வருடமாக இந்த தவறை செய்கின்றோம். இனிமேலும் செய்யாதீர்கள். நான் நாளை உங்களுக்கு துரோகம் செய்தாலும் என்னை தட்டி கேளுங்கள். நான் பயப்பிடுவேன். நான் எதை செய்தாலும் சரி என்று எண்ணி இருந்தால் செய்பவர்கள் செய்து கொண்டே போவார்கள். 

மாற்று தொழிற்சங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன. எப்படி இருந்தாலும் வேறு கட்சிகளில் இருந்தாலும் நாம் ஒரு சமூகம் ஒரே தோட்ட தொழிலாளி இந்த சம்பளத்திற்கு எதிராக போராட வேண்டும். 

அமைச்சு பதவி வைத்திருந்தால் சிலர் மௌனித்து பயப்பிடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்ல. காட்டிக்கொடுத்த இவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 

இன்றும் கொட்டகலையில் தலைவர்மார்களுக்கு தோட்டங்களில் போராட்டங்கள் செய்யாமல் தடுத்துவிடுங்கள் என்று சொல்லப்படுகின்றது. எவர் வந்தாலும் சரி அடியுங்கள். யாருக்கும் பயப்பட வேண்டாம். இப்படி செய்த தொழிற்சங்க தலைவர்களை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. 

அது அந்த காலம் தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்ற (30) கூடி அதன் தலைவருடன் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அமைச்சு அதிகாரம் தேவையில்லை. வாக்களித்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்று. ஆகையால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பேரும் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். 

பேச்சுவார்த்தை சாதகம் இல்லை என்றால் இந்த 6 பேரும் ஹட்டனில் வந்து அமருவோம். போராட்டம் ஒரு நாளில் மாத்திரம் அல்லாது தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். உலகமே இதை அவதானிக்க வேண்டும். 

முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கியது போல செய்த இவர்களை தட்டிக் கேட்போம். இப்போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும். மக்களை விற்று நான் காசு வாங்கவில்லை. பொய் சொல்லவில்லை. ஏமாற்ற எனக்கு தெரியாது. 

மக்கள் சக்தியே நிரந்தரம் என்பது எனக்கு தெரியும். ஆகையால் நியாயமான சம்பளத்தை பெறும் வரை துணிச்சலாக நின்று ஏமாற்றுபவர்களக்கு எதிராக போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கிரிஷாந்தன், இராமச்சந்திரன்

No comments:

Post a Comment