அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்பொழிவால் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இது குளிர்காலம் ஆகும். அங்கு தற்போது கடுமையான குளிர் வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக இருக்கிறது. சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை பிரிவு அறிவித்துள்ளது.
துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் வீசுகிறது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதுடன் கடும் குளிர் காற்றும் வீசுகிறது.
சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பல இடங்களில் விமானத்தை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறன.
கடும் குளிருக்கு தாக்கு பிடிக்க முடியாது என்பதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சிகாகோ மேயர் அறிவித்துள்ளார்.
அங்குள்ள கிரேட் லேக்ஸ், நியூ இங்கிலாந்து பகுதியில் நேற்று கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை.
விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ், மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களில் குளிர் நிலை மிக மோசமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment