பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலில் மஷ்ரபி மோர்தஸா அமோக வெற்றி - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலில் மஷ்ரபி மோர்தஸா அமோக வெற்றி

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அந்நாட்டு ஒருநாள் அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸா அமோக வெற்றியீட்டி, பாராளுமன்ற உறுப்பினரான முதலாவது கிரிக்கெட் வீரராக பதிவாகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சியில் போட்டியிட்ட மோர்தஸா நாராயி–2 தொகுதியில் 274,418 வாக்குகளை வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற வாக்கு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. இது அந்தத் தொகுதியில் 96 வீதத்துக்கு மேலான வாக்குகள் என டாக்க டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

35 வயதான மோர்தஸா பங்களாதேஷ் கிரிக்கெட் அணித்தலைவராக எம்.பி. பதவி ஏற்கும் இரண்டாமவராவார். இதற்கு முன்னர் நைமுர் ரஹ்மான் டுர்ஜோய் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். எனினும் விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே எம்.பியாக தெரிவாகி இருந்து முதலாவது கிரிக்கெட் வீரர் மோர்தஸா ஆவார்.

வன்முறைகளுக்கு இடையே இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் மோர்தஸா அங்கத்துவம் பெற்றிருக்கும் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 300 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 288 இடங்களை வென்றுள்ளதோடு பிரதான எதிர்க்கட்சி வெறும் ஆறு ஆசனங்களை மாத்திரமே வென்றுள்ளது.

ஏற்கனவே டி-20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் மோர்தஸா 2009 ஆம் ஆண்டு தொடக்கம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை.

மைதானத்தில் கடுமையாக போராடக் கூடியவரான வேகப்பந்து வீச்சாளர் மோர்தஸா, முழங்காலில் ஏழு தடவைகள் சத்திர சிகிச்சை செய்து கொண்டுள்ளார். மைதானத்தில் தேசப்பற்றை அதிகம் வெளிக்காட்டுபவராக நாட்டில் பிரபலம் பெற்றவராக மோர்தஸா உள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் முறை பங்களாதேஷ் அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறவும் அவர் அணித்தலைவராக செயற்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 9ஆம் திகதியன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆரம்பமான ஒருநாள் தொடருக்கு முன்பு பேசிய மோர்தஸா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், 2019 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறப் போவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment