பிரேசில் தனது இஸ்ரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நிச்சயம் மாற்றும் என்று அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
“எப்போது என்பதை தவிர அது பற்றி சந்தேகம் இல்லை” என்று பிரேசில் யூத சமூகத்திற்கு முன் உரையாற்றியபோது நெதன்யாகு குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் பிரேசில் ஜனாதிபதி ஜயிர் பொல்சனாரோ இது பற்றி தமக்கு உறுதி அளித்ததாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரியான பொல்சனாரோ இன்று பிரேசில் ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருப்பதோடு அந்த நிகழ்வில் நெதன்யாகுவும் பங்கேற்கவுள்ளார்.
இஸ்ரேலின் முதலாவது பிரதமராக பிரேசில் விஜயம் மேற்கொண்டிருக்கும் நெதன்யாகு, அந்நாட்டு தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தி வருகிறார்.
எனினும் முக்கிய இறைச்சி உற்பத்தி நாடான பிரேசில் இந்த நகர்வால் அரபு நாடுகளுக்கான 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறைச்சி ஏற்றுமதி தடைப்படும் என்று அஞ்சுகிறது. கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீன தலைநகர் என்று அந்த அரபு நாடுகள் கருதி வருகின்றன.
No comments:
Post a Comment