கேப்பாபுலவு முகாமுக்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட மக்கள் - முல்லைத்தீவில் பதற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

கேப்பாபுலவு முகாமுக்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட மக்கள் - முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக நேற்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றது. 

இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் நேற்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இதனை தொடர்ந்து குறித்த முகாம் வாயிலில் மக்கள் கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்டதும் சுமார் 150 வரையான பொலிஸார் கொண்டுவரப்பட்டு இராணுவ முகாம் வாயில்களில் நிறுத்தப்பட்டனர். 

இதனைதொடர்ந்து குறித்த இடத்தில் பதட்டமான சூழல் உருவானது. இதனை தொடர்ந்து மக்களுடன் பொலிஸார் கலந்துரையாடியபோது இராணுவ தளபதி வந்து உறுதிமொழி தரவேண்டும் என கோரினர். அதனை தொடர்ந்து பொலிஸார் இராணுவத்தினர் மக்களுடன் வந்து கலந்துரையாட மாட்டார் எனவும் மாவட்ட செயலாளரை அழைப்பதாகவும் தெரிவித்தனர். 
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் திரு கோ.தனபாலசுந்தரம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபன், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி ஆ.லதுமீரா குறித்த பகுதி கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். 

அதனை தொடர்ந்து மக்களது கருத்துக்களை கேட்டறிந்து குறித்த விடயத்தை தாங்கள் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று ஜனவரி 25 ம் திகதிக்குள் உரிய பதிலை பெற்று தருவதாகவும் அதுவரை போராட்டத்தை நிறுத்துமாறும் கோரினர். பல்வேறு முரண்பாடுகளுக்கு பின்னர் அவர்களது கருத்துக்கமைய வரும் ஜனவரி 25 ம் திகதி வரை தாம் போராட்டம் நடாத்துமிடத்தில் தொடர்ந்து போராடுவதாகவும் 25 ம் திகதிவரை தீர்வுகள் எதுவும் கிடைக்காவிட்டால் எம்மை சுட்டாலும் பரவாயில்லை தமது காணிக்குள் செல்வோம் எனவும் தெரிவித்து இராணுவ முகாம் வாசலிலிருந்து கலைந்து சென்றனர். 

முல்லைத்தீவு தவசீலன்

No comments:

Post a Comment