வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெடுக்கப்படும் சுகாதாரச் சேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கும் சுகாதார போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று சனிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.
சுகாதார போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, மருந்து தொழில்;துறையின் வணிகக் குழு உள்ளிட்ட பல நிறுவனங்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட உலர் உணவு மற்றும் குழந்தைகளுக்கான வைத்திள உபகரணங்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட நிவாரணத்தின் மொத்த மதிப்பு 02 கோடிக்கு அதிகமானவை. அதன் அடிப்படையில் கிளிநொச்சி பரந்தன் முருகாநந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கள் முகாமில் உள்ள 400 குடும்பங்கள் மற்றும் முல்லைத்தீவு சுகந்திபுரம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ள 600 குடும்பங்களுக்கு சுகாதார அமைச்சரால் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த இரண்டு முகாமில் உள்ள மக்களுக்கு உலர் உணவுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர் ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு எஞ்சியுள்ள உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இந்த சந்தர்ப்பம் வடக்கிற்கு தெற்கில் உள்ளவர்கள் செய்யும் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் மற்றுமொரு பகுதியாகும். நல்லிணக்கத்துக்காக எனது வாழ்நாள் முழுவதும் நான் செயற்பட்டுள்ளேன். நான் யுத்தத்திற்கு எதிரானவன்.
வடக்கு மக்கள் 30 வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். பின்னர் இந்த இயற்கை பேரழிவுக்கு முகங்கொடுக்கின்றனர். அந்த மக்களுக்கான உலர் உணவு, சுகாதார சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துகொண்டுதான் நான் வடக்கிற்கு வந்தேன். இவற்றை கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம்.
முகாம்களில் நோய்கள் பரவும் ஆபத்து இல்லை. முகாம்களில் சுகாதாரச் சேவையை தங்குத் தடையின்றி தொடர தேவையா மருத்துவ குழாம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பராமரிப்புகள் சிறந்த முறையில் உள்ளதாக முகாம்களில் உள்ள மக்கள் என்னிடம் கூறினர்.
வெள்ள அனர்த்தம் தொடர்பில் எனக்கு நன்கு பரீட்சியம் உள்ளது. களுத்தறை மக்களும் வெள்ள அனர்த்தத்தால் துன்பங்களை அனுபவிக்கின்றனர். நோய் பரவல் மற்றும் பரவுதலை தடுப்பதுதான் எமது முதலாது இலக்காகும். மக்களுக்கு அவசியமான உலர் உணவுகள் அரசு மூலமும் முறையாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்கவும் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கவும் அரசு உத்தேசித்துள்ளது.
சுகாதார சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயற்கை பேரிடர்களுக்கு முகங்கொடுக்கும் போது நிவாணரங்களை வழங்குவது அரசின் கடமையாகும்.
மக்களுக்கு நிவாரணம் அளித்தல் மற்றும் ஏனைய உதவிகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் சேவைகள் வரவேற்கப்பட வேண்டியது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எவ்வித மானியங்களையும் பெற்றுக்கொடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுக்கு இதன்போது சுகாதார அமைச்சர் பதிலளித்திருந்தார்,
இரண்டு கைகளையும் நீட்டி எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். எனக்கும் அவ்வாறு செய்ய முடிந்திருக்கும். என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நிவாரணங்களை சேமித்துக்கொண்டே நான் வடக்கிற்கு வந்துள்ளேன். பொய்யை விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்றார்.
இதேவேளை, சுகாதார அமைச்சருடன் இந்நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.கே. தீஸ்வரன், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினுஸ் சேனாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசின் சேனாரத்ன, கிளிநொச்சி 57ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜித ரவிப்பிரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.
|
No comments:
Post a Comment