ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிராமிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் விசேட செயற்திட்டமொன்றை செயற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாரியளவிலான அபிவிருத்தி செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அடிப்படை வசதிகளைகூட சென்றடையாத பெருமளவிலான மக்கள் கிராமிய பிரதேசங்களில் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டத்தின் தேவையுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட மக்களுக்கு தூய குடிநீரை வழங்குதல், சேனை பயிர்ச் செய்கையாளர்களுக்கு நிரந்தரமாக பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் வகையில் நிலப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல் சேனை பயிர்ச் செய்கையாளர்களின் நீர் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்குதல், காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கான நீண்டகால தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் முக்கியத்துவமளித்து செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் தொடர்பில் குறித்த துறையினரை தெளிவூட்ட வேண்டியது அவர்களின் கடமையாகுமன ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்களின் நலன்புரி தேவைகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் போதுமானதாக இருந்தாலும், அவை சரியான முறையில் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படாமையினால் பிரச்சினைகள் தோற்றுவிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அவ்வகையான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள லுனுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் ஊடாக தினசரி 35,000 கன மீற்றர் அளவிலான நீரை விநியோகிப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கதிர்காம புண்ணிய பூமியில் நிலவிவரும் நீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். கதிர்காம பிரதேசத்திற்கு நீர் வழங்கப்படும் பிரதான நீர் ஆதாரத்திற்கு மேலதிகமாக தினசரி 15,000 கன மீற்றர் அளவிலான நீரை விநியோகிப்பதற்கான திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலாளர்களும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்ர உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment