முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான குழுவினர் முன்வைத்த அறிக்கை இரு தரப்பு அறிக்கைகளாகவன்றி அனைவரதும் சம்மதத்துடனான ஒரு அறிக்கையாகவே முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்டு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்ட குழுவிலுள்ள அனைவருமே கைச்சாத்திட்டுள்ளனர்.
நீதியரசர் சலீம் மர்சூப் உள்ளிட்ட 08 அங்கத்தவர்கள் ஜனவரி 20ஆம் திகதியன்று இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டு நீதி அமைச்சில் ஒப்படைக்க, அஷ். ரிஸ்வி முப்தி முதலாவதாக கைச்சாத்திட்டுள்ள 09 பேர் அடங்கிய ஏனைய அங்கத்தவர்கள் அடுத்த நாளான 21 ஆம் திகதி அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன் போது அஷ். ரிஸ்வி முப்தியை முன்னிலைப்படுத்திய அங்கத்தவர்கள் 08 பக்கங்கள் அடங்கிய தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர். இதுவும் அறிக்கையின் ஒரு பகுதியாகவே இணைக்கப்பட்டுள்ளது. அறிக்கை முன்னைய நாளே ஒப்படைக்கப்பட்டு விட்டதால் அறிக்கையின் உள்ளடக்க அட்டவணையில் இந்த 08 பக்கங்களும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் நீதி அமைச்சு இதனை தனியான ஒரு இணைப்பாக வெளியிட்டுள்ளது. இதுவே அறிக்கை இரண்டாகக் கருதப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
அந்த வகையில் இரண்டாவது நாள் நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஆவணங்களே அன்றி தனியானதொரு அறிக்கை அல்ல என்றும் பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே பின்னர் இடப்பட்ட கையொப்பங்களும் முழு அறிக்கையையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே குழுவினரின் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது நாள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள விடயங்களைத் தவிர குழுவின் அறிக்கையிலுள்ள ஏனைய விடயங்கள் அனைத்தும் குழுவின் அங்கத்தவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது நாள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ். ரிஸ்வி முப்தியே முதலில் கைச்சாத்திட்டுள்ள போதும் ஆறாவதாக ஒப்பமிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தரப்பு அறிக்கையாகவே இந்த ஆவணம் குறித்துரைக்கப்படுகிறது.
குழுவிலுள்ளவர்களில் சிலர் சில விடயங்களைத் தவிர அறிக்கையின் ஏனைய விடயங்களையும் அங்கீகரித்த போதும் மொத்த அறிக்கையும் பிழையானது என்ற கருத்தும் குழுவிலுள்ள சிலராலேயே பரவலாக்கப்பட்டும் வருகிறது.
மீள்பார்வை செய்திகள்
No comments:
Post a Comment