வன விலங்குகளால் உணவு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (26) பிற்பகல் சந்தித்தபோதே சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Shenggen Fan இவ்விடயம் தொடர்பில் தனது இணக்கத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயிரிடப்படும் உணவுப் பயிர்கள், மரக்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் சுமார் 40 சதவீதமளவில் வன விலங்குகளினால் வீணடிக்கப்படுகின்றன. வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்களின் அறுவடை குறைவடைவதன் காரணமாக மக்களுக்கு போஷாக்கான உணவு வேளைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லாது போகின்றது.
விலங்குகளையும் பாதுகாத்தவாறே இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், உலகின் பல்வேறு நாடுகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளன. அவ்வாறான நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழங்கிய தீர்வுகளினூடாக பெற்ற அனுபவங்களின் பயனாக இலங்கையிலும் இந்த நிலைமையை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தமது நிறுவனம் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
போஷாக்கின்மையை இல்லாது செய்து மக்களுக்கு சுகாதார பாதுகாப்பான உணவு வேளைகளை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தாம் உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்த பணிப்பாளர் நாயகம், அதற்கான நிதியுதவியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான வரைவினை துரிதமாக தயாரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சகல இலங்கையர்களினதும் போஷணை மட்டத்தினை அதிகரிக்கச் செய்து போஷாக்கின்மையை இல்லாது செய்தல் அரசாங்கத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் போஷாக்கான உணவு வேளையை உட்கொள்ளாமை ஆகியனவே போஷாக்கின்மைக்கான முதன்மை காரணங்களாகும். அத்துடன் முறையற்ற உணவு பழக்கத்தினால் நாட்டு மக்களில் 17 சதவீதமானோர் நீரிழிவு நோயினாலும் 48 சதவீத பெண்கள் உடல் நிறை அதிகரிப்பினாலும் 20 சதவீதமானோர் போஷாக்கின்மையினாலும் அவதியுருவதுடன், அவர்கள் தொற்றா நோய்கள் பரவக்கூடிய அச்சுறுத்தல்களையும் கொண்டுள்ளனர்.
இதனால் இலங்கைக்கு தேசிய உணவுக் கொள்கையொன்றிணை அறிமுகப்படுத்தவும் சுகாதார பாதுகாப்பான உணவு வேளையை பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுவதற்கும் தேவையான நிபுணர்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சர்வதேச உணவுக் கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்விடயம் தொடர்பிலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்க தாம் தயாராக உள்ளதாக பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தினை பார்வையிட வருகைத்தருமாறும் எதிர்வரும் நவம்பர் மாதம் பெங்கொக் நகரில் இடம்பெறவுள்ள உணவு முறைகள் பற்றிய ஆய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்பாளர் நாயகம் அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment