தேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான முழுநாள் விவாதம் இன்று (05) நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விவாதத்தில் கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்தனர்.
தேசிய கணக்காய்வுக்கு சட்டமூலமொன்று கொண்டு வரப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இச்சட்டமூலத்தை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
குழுநிலையில் அரசாங்கமும், ஜே.வி.பியும் திருத்தங்களை முன்வைத்தன. ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி முன்வைத்த 16 திருத்தங்களில் சில திருத்தங்கள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அரசாங்க நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நிதி மோசடிகள் மற்றும் வீண்விரயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி அரச நிறுவனங்களை கணக்காய்வுக்கு உட்படுத்தல், கணக்காய்வாளர் அதிபதியின் அதிகாரங்களும் பணிகள், கணக்காய்வின் பின்னர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்கானப்பட்டவருக்கு ஆகக் குறைந்த 5 ஆயிரம் ரூபாவும், 25 ஆயிரம் ரூபாவுக்கு அதிகரிக்காத தண்டப்பணம் அறிவிடுதல் போன்ற விடயங்கள் இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை கணக்காய்வு தகவல்களை வெளியிட முடியாது என இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
No comments:
Post a Comment