வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தகமொன்றின் களஞ்சியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (04) இரவு 9.15 மணியளவில் இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளதோடு, வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவப்புளியங்குளம், இராசதுரை வீதியில் அமைந்துள்ள இராசையா மருந்தகத்தின் உரிமையாளரின் இல்லத்தில் உள்ள மருந்தக களஞ்சியத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களின் உதவியுடன், வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் 30 நிமிடங்களாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
களஞ்சியசாலையில் ஆயுள்வேத மருந்து தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment