போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸார் இன்று (23) கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த், ஒரு கிராம் அளவில் 12,000 ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை 40 முறைக்கும் மேல் வாங்கியிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் கூகுள் பே மூலம் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
பின்னர் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திரையுலகத்தைச் சேர்ந்த மற்றைய நபர்களும் தொடர்புடையவர்களா என நுங்கம்பாக்கம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே பிரசாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடந்த விசாரணையில் ஸ்ரீகாந்தின் பெயர் வெளியானதுதான் இந்த நடவடிக்கையின் தொடக்கமாக இருந்தது.
ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட விவகாரம், தமிழ்த் திரைப்படத் துறையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இனி, இந்த விசாரணைத் தொடரில் மேலும் பல பெயர்கள் வெளியாகப்போகின்றன என செய்திகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment