எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்காக தமது கண்ணீரையும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, உயிர்த் தியாகங்களை செய்து சேவையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சர்வதேச தொழிலாளர் தினத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் எமது நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, தொழிற்சங்கங்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் பெற்றுக்கொடுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் பாராட்டி, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
உழைக்கும் மக்களுக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றிய, மே தினத்தை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, அப்போதைய தொழிலமைச்சராக பதவி வகித்த டி.பி.இலங்கரத்ன மற்றும் கட்சியின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்களான காலஞ்சென்ற ஆனந்த தஸநாயக்க, ஹார்பர்ட் விக்கிரமசிங்க, டீ.சி.வீரசேக்கர, பாரத லக்ஷமன் பிரேமசந்திர, அலவி மௌலானா உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இதன்போது ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர். முன்னாள் தொழிற்சங்க தலைவர்களை பாராட்டி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டபிள்யு.டி.ஜே. செனவிரத்தின, சந்திம வீரக்கொடி, லசந்த அழகியவன்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment