2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் பிரபல அமைச்சரொருவரை பொதுவேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கும், அரசின் தலைவர்கள் சிலருக்குமிடையில் பேச்சுகள் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இன்றுவரை இயங்கிவரும் தேசிய அரசில் முன்னாள் ஜனாதிபதிக்கு சார்பான தரப்பொன்று இருந்தமையாலேயே இந்த அரசால் மக்கள் பாரிய வெற்றியைப் பெறமுடியாதுபோயுள்ளது.
தவறுகளை மறுசீரமைத்து மீண்டும் பொதுவேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்ந்து ஆட்சியைக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளதாகவும், பொதுவேட்பளராகக் களமிறக்கப்படவுள்ள பிரபல அமைச்சருக்கு அமெரிக்காவில் ஒருமாதகால அரசியல் பயிற்சிகளும் அளிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், மீண்டும் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐ.தே.க. சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படவேண்டுமென ஒரு தரப்பும், சஜித்துக்கு வாய்ப்பளிக்கவேண்டுமென ஒரு தரப்பும் கருத்துகளை முன்வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டுமென்ற நிலைபாட்டில் சு.கவினர் உள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் நோக்கத்தோடு பொது எதிரணி வியூகங்களை மறுபுறத்தில் வகுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது – என்றுள்ளது.
No comments:
Post a Comment