இலங்கையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவருவேன் என தமிழக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் 413 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று(06) சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு வருடத்திற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை நான் நேரில் பார்த்து அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளேன். எனவே தமிழகம் திரும்பியதும் அடுத்து வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வரிடமும், சபாநாயகரிடமும் இந்தப் பிரச்சினையை எடுத்துச் கூறி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து அதனை ஏனைய தோழமை கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைப்பேன் எனவும் தெரிவித்தார். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அரசு ஒரு தீர்வை வழங்குவதற்கு நிச்சயம் என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னாலான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். கடந்த மாதம் நான் ஜெனீவா சென்று அங்கு ஈழத்தமிழர்கள் குறித்த பேச இருந்தேன். ஆனால் எனது பயணம் தடுக்கப்பட்டது. ஒரு நடிகனாக பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் கடந்த மாதம் செல்ல இருந்த பயணம் மாத்திரமே திட்டமிட்டு மறுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இது எங்களுடைய பிரச்சினை. எனவே அவர் பார்ப்பார், இவர் பார்ப்பார், அவர் தீர்த்து வைப்பார் என்றில்லாது இது நம்ம பிரச்சினை, நாமே பார்த்துக்கொள்வோம் என்று செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment