தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா வடக்கில் அதிகபடியான ஆசனங்கள் பெற்றிருக்கும் நிலையில், கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் உதவவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கீகரித்துள்ளது.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகளை ஆட்சியமைக்க இடமளிக்கக் கூடாது என்றும் தமிழ் கட்சி ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் கூறியுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் 12 ஆசனங்கள் பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலமையிலான பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைப்பதற்கு முயற்சிக்கின்றது.
இதேவேளை 8 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தலா 3 ஆசனங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் 3 தமிழ் கட்சிகளும் இணையாது விட்டால், சிங்களக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோர் தமிழ் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு இன்று பதிலளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி. மணிவண்ணன், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு பாரிய ஆபத்தில் உள்ள பகுதி வவுனியா வடக்காகும். அது தமிழ் மக்களுடைய நிலம். அங்கே தமிழர்களே ஆட்சியமைக்க வேண்டும். எனவே, தமிழ் கட்சி ஒன்று ஆட்சியமைக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment