புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன - மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன - மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்

சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாறான சிங்கள குடியேற்றங்களை இந்த அரசாங்கம் மட்டுமல்ல எல்லா அரசாங்கங்களும் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே சிங்கள இனவாதிகள் சுதந்திர தமிழீழத்தை தரப்போகிறீர்களா? சுயாட்சி தீர்வை தரப்போகிறீர்களா? என தீர்மானிக்கவேண்டும் என்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு வட மாகாண சபையில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வட மாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம். நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது. நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்’ என கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புற்றுநோய் போல் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் முல்லைத்தீவில் தமிழர்களின் இருப்புக் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றை கல்லோயா என பெயர் மாற்றம் செய்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தார்கள். இவ்வாறு காலத்திற்கு காலம் எல்லா அரசாங்கங்களும் தமிழ் மக்களுடைய நிலத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேயற்றங்களை மேற்கொண்டன என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment