பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித பண்டங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித பண்டங்கள்

பௌத்தத்தின் உயரிய பாரம்பரியங்களை இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் நிமித்தம், பாகிஸ்தானிய அரசாங்கம் அந்நாட்டில் காணப்படும் புத்த பெருமானின் உயரிய புனித பண்டங்களை (நினைவுச் சின்னங்கள்) வருடாந்த புத்த ரஷ்மி வெசாக் வைபவத்தில் காட்சிப்படுத்துவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைத்தது. 

தக்ஷில்லா அரும்பொருட்காட்சிசாலையின் காப்பாளரினால் கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித பண்டங்களை இலங்கையின் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி.ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், சிரேஷ்ட பிக்குகள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், மத குருமார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் பெற்றுக்கொண்டனர்.

இப் புனித புத்த நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கொழும்பு கங்காராம விகாரை மற்றும் அலரி மாளிகையில் நேற்றைய தினம் (29-04-2018) ஆரம்பமாகியது. அதன்பின்னர் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பிரசித்திபெற்ற விகாரைகளில் காட்சிப்படுத்தப்படும். 

ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கொழும்பில் புனித பண்டங்கள் காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர் இப்புனித பண்டங்கள் வெல்லம்பிடிய, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல்,அனுராதபுரம் மற்றும் கண்டி நகர்களுக்கு எடுத்துச்செல்லப்படும். மே மாதம் 16 ஆம் திகதி புனித புத்த பண்டங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்படும். 
இப்புனித பண்டங்கள் பாகிஸ்தானின் தக்ஷில்லா அகழ்வுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். அத்துடன் அவை ஆசியாவின் மிகமுக்கிய அரும்பொருட்காட்சியகங்களில் ஒன்றான தக்ஷில்லாவில் வைக்கப்பட்டிருக்கின்றது.

இப்புனித பண்டங்கள் தக்ஷில்லாவின் ஆரம்பகால மிகப்பெரிய பௌத்த தளமான தர்மராஜிக தூபியின் அருகிலே முதலில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. தர்மராஜிக தூபி மௌரிய அரசன் அசோகனால் புத்தரின் புனித பண்டங்களை வழிபடுவதற்காக கி.மு. 3 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கட்டுவிக்கப்பட்டது. மௌரிய அரசன் அசோகன் பௌத்தத்திற்கு ஆற்றிய சேவையின் நிமித்தம் தர்மராஜா எனவும் அறியப்படுகின்றார். 

தர்மராஜிக சேர் ஜோன் மார்ஷல் மற்றும் ஏ.டி.சித்திக் (1934-36) ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் குலாம் கதீர் என்பவரால் 1912-16 காலப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. பௌத்த மதத்தின் ஆரம்பம் மற்றும் அபிவிருத்தியானது தொன்மைவாய்ந்த நிலமான பாகிஸ்தானிற்கு பெரும் பெருமையினை சேர்க்கின்றது. பௌத்த மதத்தின் நடவடிக்கைகள் நன்கு அறியப்பட்ட மிஷனரிகளூடாக அதன் உச்சகட்டத்தினை அடைந்ததும், இறுதியாக உலக மதமாக பரிணமித்ததும் இவ்விடத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment