இம்முறை சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என்று விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய வகையில், 2500 பேரைக் கொண்ட விவசாயப் பிரதிநிதி வலைப்பின்னல் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காப்புறுதி நடைமுறை குறித்து, விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு மேலதிகமாக, பாசிப்பயறு, எள்ளு, கௌபி உள்ளிட்ட, ஏனைய உற்பத்திகளுக்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
விவசாயிகளின் உற்பத்திக்குச் சிறந்த விலையை பெற்றுக் கொடுக்கும் நடைமுறைத் திட்டமொன்றும் வகுக்கப்படவுள்ளது என்றும் விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment