முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச சபையின் கீழுள்ள மல்லாவி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளை வர்த்தகர்களுக்கு வழங்குவதில் பிரதேச சபை தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லாவி பொதுச்சந்தையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவீன கடைத்தொகுதியொன்று அமைக்கப்பட்டு இதுவரை வர்த்தகர்களுக்கு வழங்கப்படாது மூடிய நிலையில் காணப்படுகின்றது. இதனைத் தமக்கு வழங்குமாறு வர்த்தகர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை நிர்வாக வர்த்தகர்கள் இணைந்து பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும், இதுவரை குறித்த கடைத்தொகுதிகள் வழங்கப்படவில்லை.
குறித்த கடைத்தொகுதிகளை வழங்குமாறு கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இக்கடைகள் வழங்கப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், வட மாகாண முதலமைச்சருக்கு குறித்த கடைகளை வழங்குவது தொடர்பில் கடிதம் அனுப்பியிருக்கின்றோம். அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் கடைகளை வழங்கமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment