அம்பாறையில் நடைபெற்றுள்ள இனவாத செயலானது கண்டிக்கத்தக்கதோடு, சம்பந்தப்பட்ட காடையர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த செயற்பாட்டை அரசியல் நோக்காக கொண்டே நிகழ்த்தியுள்ளமை புரிகிறது. இந்த நேரத்தில் பெரியவன் நானா? நீயா? என்கின்ற போட்டியை தவிர்த்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதோடு எதிர்காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களும், சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மகிந்தராஜபக்ஷ - ரணில் - மைத்திரி இவர்கள் நமது கடவுளர்கள் இல்லை. நம்மை பாதுகாப்பது அல்லாஹ் மட்டுமே. ஆனால் நாம் ஒற்றுமையாகாத வரையில் அல்லாஹ்வின் உதவி நமக்கு கிடைக்காது. மார்க்கத்தில் பிரிவினை, அரசியலில் பிரிவினை, ஊருக்குள் பிரிவினை இப்படி பிரிவினையை மட்டுமே நமக்குள் அதிகம் இருக்கின்றபோது இறைவனின் உதவி நமக்கு கிடைக்காது. நாம் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று நமது பிரச்சனைகளை ஒப்புவிக்கின்ற போதுதான் அல்லாஹ்விடத்திலும் இந்த அரசாங்கத்திலும் அது பெறுமானம் உடையதாக மாறும்.
உதடுகளினால் இறைஞ்சுகிறோம் உள்ளம் முழுக்க அழுக்கு நிரம்பி வழிகிறது. யாரு ஆட்சி செய்தாலும் பெரும்பான்மை அரசுக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது. அதன்படியே அவர்கள் நடப்பார்கள். இதற்காக அமைச்சர் ஹக்கீமுக்கு ஏசுவதும் அல்லது அமைச்சர் ரிஷாதுக்கு ஏசுவதும் நமது இயலாமையின் வெளிப்பாடே தவிரவேறில்லை.
இதுவரைக்கும் பொதுபலசேனா, டான்பிரசாத், சாலிய போன்ற இனவாத பேய்களை மட்டுமே நமது கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியாத இனவாத முகம்கள் நிறையவே இருக்கின்றன. இன்று நல்லாட்சியில் இருக்கின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை விடவும் பெரிய இனவாதி யாரும் கிடையாது. அவ்வாறே தாயாகமகே, உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர இவர்கள் எல்லாம் நம்மோடு புன்னகைத்துவிட்டு, கைகுலுக்கிவிட்டு சந்தர்ப்பம் பார்த்து நிற்பவர்கள்.
இனவாதம் என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல, இதற்கான தீர்வு மைத்திரி -ரணில் கூட்டாட்சியை விரட்டிவிட்டு மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவது தீர்வாகாது. அதற்காய் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இனவாத மற்றவர்களாகவும் நமக்கான தீர்வினை நம்பிக்கையோடு பெற்றுத்தருபவர்களுமல்லர். இதற்காக இருக்கின்ற பலத்தை இழந்துவிட்டு கையாலாகவர்களாக ஆகுவது புத்திசாலித்தனமான முடிவாகாது.
பிரச்சினைகள் எழும் சூடுபிடிக்கும் பின்னர் அடங்கிப்போகும் ஆனால் நமக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமானால் நாம் சமூக பிரச்சினைகளை இணைந்து முகம் கொடுக்க வேண்டும். அது சாத்தியப்படாத வரை இந்த பிரச்சினைக்கான தீர்வு முழுமையாக எட்டப்படாது. 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்போது இணைந்து குரல் கொடுப்பார்களோ அப்போதுதான் நாம் தலைநிமிர்ந்து வாழலாம் அதுவரை இந்த இழப்புக்களை சந்திக்க வேண்டியது நமது தலைவிதியாகும்.
நாச்சியாத்தீவு பர்வின்
No comments:
Post a Comment