இலங்கையில் ஆங்கில மொழியை பிரபல்யப்படுத்த அமெரிக்க சமாதான படையணி தொண்டர் வளப்பங்களிப்பை பெற்றுக்கொள்ள தயாரிக்கப்பட்ட இருதரப்பு உடன்படிக்கை இம்மாதம் இறுதியில் கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க சமாதான படையணியின் தலைமை பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி ஷீய்லா கிறோவ்லி இலங்கை வரவுள்ளார். பிரதமரின் அழைப்புக்கு அமைவாக சமாதானபடையணிகளின் பிரதிநிதிகள் சிலர் கடந்த வருடம் மே மாதம் 14 ஆம் திகதி இலங்கை வந்திருந்தனர். இவர்கள் 26 ஆம் திகதி வரையில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையில் பல இடங்களுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் சிபாரிசுக்கு அமைவாக அமெரிக்க சமாதான படையினர் தமது தொண்டர் வேலைத்திட்டத்தை இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளனர். அமெரிக்க சமாதான பிரதிநிதிகளின் குழு சமீபத்தில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது முக்கிய விடயமாக ஆங்கில மொழியை போதிப்பதற்கு இந்த நாட்டில் கூடுதலான சந்தர்ப்பம் இருப்பதாக கண்டறிந்தனர்.தொண்டர் பங்களிப்புடன் பாடசாலை கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உதவியுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவினர் உள்ளுரில் உதவும் குடும்பங்களுடன் 27 மாதம் நாட்டில் தங்கியிருந்து ஆங்கில மொழியை பிரபல்யம் படுத்துவதில் ஈடுபடுவர்.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது தொண்டர் குழு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வரவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment