வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவிக்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பெண்கள் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பான அறிக்கை வராமையால் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 13 வயது மாணவியான ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஒருவரை கைது செய்திருந்ததுடன் அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும் இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையிலும் சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை.
வித்தியா கொலை வழக்கை துரிதப்படுத்தி நீதி வழங்கியது போன்று இந்த மாணவிக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும் பெண்கள் அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment