அரசின் திட்டங்களை பிழையாக காட்டி மக்களை குழப்புகிறார் காரைதீவு தவிசாளர் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் காட்டம் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

அரசின் திட்டங்களை பிழையாக காட்டி மக்களை குழப்புகிறார் காரைதீவு தவிசாளர் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் காட்டம் !

நூருல் ஹுதா உமர்

மக்களின் தேவைக்காக அமையப்பெறப்போகும் பண்ட் வீதிக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் குடைபிடிப்பதன் அர்த்தம் என்ன. ஏலவே இருந்த பண்ட் வீதியே மாற்றுவழியாகவும் சனநெரிசலை குறைப்பதற்கான தீர்வாகவும் செப்பனிடப்படுகின்றதே தவிர வயல் நிலங்களோ, குடியிருப்புக்களோ அல்ல. பண்ட் வீதி ஏலவே அவ்விடத்தில் வழமையாக உள்ளது. அதனைத்தானே காபட் வீதியாக மாற்றுகின்றனர். புதிதாக ஒரு வீதியை ஆற்றுக்கு குறுக்காக அமைக்க வில்லையே. காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வேண்டுமென்றே தடுக்கும் குறுகிய நோக்கம் கொண்டு மாத்திரம் பாராது எதிர்கால சந்ததியையும், நலனையும் கருத்தில் கொண்டு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பீ.எம். ஷிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சிறிய குழுவினர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர். 

மேலும் தனது அறிக்கையில், ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" ஒரு இலட்சம் வீதிகள் அபிவிருத்தி செயற்திட்டத்திற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமாகிய ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் முயற்சியின் பேரில் அமையப் பெறும் மாவடிப்பள்ளி - கல்முனை பண்ட் வீதி கார்பட் வீதியாக செப்பனிடும் பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வாகன நெரிசலை கொண்ட இந்தப் பிராந்தியத்தின் வாகன நெரிசலை குறைத்துக் கொள்வதற்கான தீர்வாகவும், எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்காகவும் நோக்கின் இது விடையம் வரவேற்புக்குரியதாகும். 

ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்ட இலங்கை மக்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்வீதி புனரமைவினால் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், காரைதீவு பிரதேச சபையின் தலைவர் உட்பட சிலர் இது விடையத்தினை கறுப்புக் கண்ணாடி போட்டு நோக்குவதும், காழ்ப்புணர்வோடு பார்ப்பதும், மழை பெய்தால் எங்கள் ஊரே தாண்டுவிடும் என வேண்டுமென்றே போலிகளைப் புனைந்து அறிக்கை விடுவதும் வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment