சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே கைது, பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது, தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் - சரத் வீரசேகர சூளுரை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே கைது, பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது, தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் - சரத் வீரசேகர சூளுரை

(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்கள் அலையாக திரண்டுள்ளமையின் நோக்கத்தை நன்கு அறிவோம். சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமையவே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆகவே தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் தற்போது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்கள்.

போராட்டம் அலை போல் திரண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடல் ஜனநாயக உரிமையாக காணப்படுகிறது. இதனை இவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோளிய மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை நாமும் தற்போது எதிர் கொண்டுள்ளோம்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் கடந்த வாரம் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணான வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

பொது சுகாதார சேவை அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனை தவறு என எவராலும் குறிப்பிட முடியாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல விடயங்களையும், முக்கிய பண்டிகைகளையும் கொண்டாடாமல் தியாகம் செய்துள்ளார்கள்.

பண்டிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் எவரும் வீதிக்கிறங்கி போராடவில்லை. . தற்போதைய போராட்டங்கள் குறுகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.

போராட்டக்காரர்கள் எல்லை மீறி செயற்பட்டதன் காரணமாகவே பொலிஸார் அவர்களை கைது செய்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் போராட்டத்தை அடக்கிய வகையில் நாம் செயற்படவில்லை.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டமை சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே இடம்பெற்றது. ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஒட்டு மொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. தனிமைப்படுத்தல் சட்டம் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment