கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க இரு வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தும் தாய்லாந்து - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க இரு வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தும் தாய்லாந்து

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு புழக்கத்தில் உள்ள சீனாவின் சினோவாக் மருந்துடன் அஸ்ட்ராசெனிகா மருந்தை கலந்து எதிர்ப்பாற்றலை பெருக்கும் வகையில் தமது தடுப்பூசி கொள்கையை தாய்லாந்து அரசு மாற்றியுள்ளது.

தாய்லாந்தில் சினோவாக் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக போட்டுக் கொண்ட நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் வைரஸ் கண்டறியப்பட்டதால், இந்த முடிவை தாய்லாந்து அரசு எடுத்துள்ளது.

புதிய கொள்கைப்படி சினாவாக் இரண்டு டோஸ்களை போடுவதற்கு பதிலாக இனி முதல் டோஸ் ஆக சினாவாக் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வார்கள்.

ஏற்கெனவே இரண்டு டோஸ் சினோவாக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அவர்கள் மூன்றாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா மருந்தையோ எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளான ஃபைசர் அல்லது பயோஎன்டெக்கையோ போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதல் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட மூன்று முதல் நான்கு வார காலத்தில் மூன்றாவது எதிர்ப்புத்திறன் கூட்டும் பூஸ்டர் மருந்து போடப்படும் என்று தாய்லாந்து நோய்த்தொற்று தடுப்புக் கமிட்டி அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் தற்போது கையிருப்பில் கிடைக்கும் ஒரே தடுப்பூசி மருந்தாக அஸ்ட்ராசெனிகா உள்ளது. அந்நாட்டுக்கு ஃபைசர், பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகளை தருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அந்த தடுப்பு முரந்து விரைவில் தாய்லாந்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் கடந்த பெ ப்ரவரி மாதம், முதல் தவணையாக சுகாதார ஊழியர்களுக்கு சீனாவின் சினாவாக் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டில் ஆறு லட்சத்து 77 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

இதில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு செவிலியர் இறந்து விட்டார். ஒரு மருத்துவ ஊழியர் கவலைக்கிடமாக உள்ளார்.

நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. 

மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது. இறப்பு விகிதம் 86.3 சதவீதம் அளவுக்கு குறைகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 9,418 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு ஒரே நாளில் 91 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

No comments:

Post a Comment