உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னால் பெரும் சதி உள்ளதா ? : அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எமக்கு திருப்தி இல்லை - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் பேராயர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னால் பெரும் சதி உள்ளதா ? : அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எமக்கு திருப்தி இல்லை - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் பேராயர்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக ரீதியாக நீதியை பெற்றுக் கொள்வதற்காகவே நாம் முயற்சிப்பதுடன், சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை. சர்வதேசத்தை நாடினால் அது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். எந்த அரசியல் சாயமும் பூசப்படாதவர்களைக் கொண்டு முறையான உள்ளக விசாரணையொன்றை நடத்த வேண்டும். மேலும், முன்னாள் சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை பெரும் சதி (GRAND CONSPIRACY) என கூறியிருந்ததை நாம் ஆழமாக ஆராய வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயித்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று (13.07.2021) கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு 26 மாதங்கள் கடந்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ‍வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள், அதனை திட்டமிட்டவர்கள், இந்த கொடூரத் தாக்குதலை தவிர்க்க முடிந்திருந்தும் அதனை பொருட்படுத்தாது விட்டவர்கள் ஆகியோரை சட்டத்துக்கு முன் கொண்டு வரும் செயற்திட்டம் மிகவும் மந்தகதியில் நடத்தப்பட்டு வருகின்றதை நாம் மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்களின் மில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு செயற்படுத்தப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரேரணைகளை எந்த காரணத்துக்காக தாமதப்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

கீழ்வரும் விடயங்கள் குறித்து உங்களின் அவதானத்தை செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து எமக்கு திருப்தி இல்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

எதன் காரணமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி இல்லை என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக 40 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார். அந்த 40 பேர் யார் என்று பார்த்தால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பேரே அவர்கள் ஆவார்.

இவர்கள் மாத்திரமல்ல, இந்த தாக்குதல் விடயத்தை முற்கூட்டியே அறிந்திருந்தவர்கள், கடமைகளை தட்டிக் கழித்தவர்கள், பொறுப்பபுக் கூறலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக திரியும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள்,புலனாய்வுத் துறையினர், பொலிஸார் என பலர் காணப்படுகின்ற போதிலும், குறித்த 40 பேருக்கு எதிராக மாத்திரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளமையே அதற்கு காரணமாகும்.

மேலும், இவ்விடயம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கூறப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், சில விடயங்கள் குறித்து நாம் ஆழமான விசாரணைகளை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, அரசியல் சாயம் பூசப்படாத குழுவினரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேலும், அப்போதைய சட்டமா அதிபரான தப்புல டி லிவேரா உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை 'பெரும் சதி' உள்ளதாக கூறியிருந்தார். அவர் கூறிய அந்த விடயத்தை நாம் இலகுவாக எடுக்கக்கூடாது. எதற்காக அவர் அவ்வாறு கூறினார் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்" என பதிலளித்தார்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதமானது...!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு 26 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட பேரரணைகள், ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்ட சாட்சியங்கள், பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள், புலனாய்வுத் துறையினர், பொலிஸார் என பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை தொகுத்து 19 பக்கங்களைக் கொண்ட ஓர் கடிதமொன்றை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் 2021. ஜூலை 12 ஆம் திகதி இடப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அதேவேளை, இன்று ஊடகங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதமானது, அருட் தந்தையர்கள், சமூக வல்லுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய கத்தோலிக்க பதிப்பகக் குழுவினால் தயாரிக்கப்பட்டு, மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, துணை ஆயர்கள், அருட்தந்தையர்கள் 34 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment