முஸ்லிம் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளில் திருத்தம் - 16 வர்த்தமானிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு - நீதித்துறை பயிற்சிக் கல்லூரியை நிறுவுதல் உள்ளிட்ட அமைச்சரவையில் 8 தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

முஸ்லிம் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளில் திருத்தம் - 16 வர்த்தமானிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு - நீதித்துறை பயிற்சிக் கல்லூரியை நிறுவுதல் உள்ளிட்ட அமைச்சரவையில் 8 தீர்மானங்கள்

முஸ்லிம்களின் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12ஆவது சரத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்கச் சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்குவதற்கான தேவையை பல்வேறு மகளிர் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால், இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாயின், அவர்களுக்கு குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கை உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

விவசாயத்துறையில் விஞ்ஞான ரீதியானதும் முகாமைத்துவ அறிவு மற்றும் திறன்களை பரிமாற்றிக் கொள்ளும் நோக்கில், உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இருதரப்புக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. நீருக்கு மேலான சுற்றுலா மேடை வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா மேடை விடுதிகளுக்கான அனுமதியைப் பெறல்

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் உயர்ரக சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு சில நாடுகள் நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகள் (Water Villas) எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளனர். கற்பிட்டி மற்றும் ஏனைய கடலோரப் பிரதேசங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகளைப் பயன்படுத்த முடியுமென தெரியவந்துள்ளது. தீவுச் சுற்றுலா விடுதிகள் எண்ணக்கருவை மேம்படுத்தி கற்பிட்டி பிரதேசத்தில்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள 12 தீவுகள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கற்பிட்டி பிரதேசத்தில் வெள்ளை I, II மற்றும் III போன்ற தீவுகளை நீண்டகாலக் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட சன் ரிசோட் இன்வெஷ்ட்மென்ட் லங்கா (தனியார்) கம்பனியால் நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுதல்

நீதிபதிகளின் நிறுவனம், இலங்கையிலுள்ள நீதித்துறைக்காக அமைந்துள்ள ஒரேயொரு கற்கை நிறுவனமாவதுடன், அதன் மூலம் நீதிபதிகளுக்குப் போதுமான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இயலளவை அதிகரிப்பதற்காகவும் கிடைக்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாதுள்ளது. உலகில் நீதிபதிகளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதற்காகவும் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் பல்கலைக்கழகத்திற்குச் சமாந்தரமான வகையிலான வசதிகளுடன் கூடிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சட்;ட மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அதே போல் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக தேவையான வசதிகளை வழங்க வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார அவர்களின் தலைமையில் துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

கீழ்க்காணும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

i. 2011 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்:

• 2021.02.22 திகதிய 2216/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.03.09 திகதிய 2218/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.03.09 திகதிய 2219/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.19 திகதிய 2224/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.06.11 திகதிய 2231/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ii. 1989 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்:

• 2021.04.05 திகதிய 2222/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.05 திகதிய 2222/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.22 திகதிய 2224/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

iii. 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வணிகப் பொருட்கள் வரிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்:

• 2021.04.13 திகதிய 2223/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.26 திகதிய 2225/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.27 திகதிய 2225/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.04.27 திகதிய 2225/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.05.17 திகதிய 2228/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.06.14 திகதிய 2232/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

iv. 1962 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க வருமானப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்:
• 2021.04.22 திகதிய 2224/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2021.05.17 திகதிய 2228/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

6. பெற்றோலிய வளங்கள் சட்டமூலம்

இலங்கையில் பெற்றோலிய மற்றும் வாயுக்கள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை அபிவிருத்திக்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. நீதி அமைச்சர் நியமித்த நொத்தாரிசு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்

சட்டத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் தொடர்பாக பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் நீதி அமைச்சர் அவர்களால் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள நொத்தாரிசு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கீழ்க்காணும் கட்டளைச் சட்டங்கள்ஃசட்டங்களை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அட்டோனித்தத்துவ அதிகாரங்கள் கட்டளைச் சட்டம்
• நொத்தாரிசுகள் கட்டளைச் சட்டம்
• ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம்
• மோசமான நன்றிக்கெடுதலின் பிரகாரம் மாற்ற முடியாத அன்பளிப்புக் காணிப்பத்திரங்களை நீக்கம் செய்தல் சட்டம்
• உயில் சாசனச் சட்டம்

8. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அரச காணிகளின் உரிமையை பல்கலைக்கழகத்திற்கு வழங்கல்

1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தேசிய பல்கலைக்கழகங்கள் பதினாறில் (16) ஒன்றாகும். அடிப்படைப் பாடநெறி தொடக்கம் கலாநிதிப் பட்டப்படிப்பு வரை எழுபத்தைந்து கற்கை நெறிகள் (75) நடாத்தப்பட்டு வருவதுடன், 2020 ஆம் ஆண்டில் குறித்த பல்கலைக்கழகத்திற்கு 44,600 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி முறை மூலம் உயர்கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள ஓரேயொரு உயர்கல்வி நிறுவனமான இப்பல்கலைக்கழகத்தில் பிராந்திய நிலையங்கள் ஒன்பதும் (09) கற்கை நிலையங்கள் பத்தொன்பதும் (19) நாடளாவிய ரீதியில் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்காக குறித்த பிராந்திய நிலையங்கள் மற்றும் கற்கை நிலையங்களில் போதுமானளவு பௌதீக வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு இயலுமான வரையில் குறித்த நிலையங்கள் அமைந்துள்ள பதினேழு (17) அரச காணிகளை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment