ஜனாதிபதியின் கருத்து நீக்கம் : டுவிட்டருக்கு அதிரடியாக தடை விதித்தது நைஜீரிய அரசு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

ஜனாதிபதியின் கருத்து நீக்கம் : டுவிட்டருக்கு அதிரடியாக தடை விதித்தது நைஜீரிய அரசு

ஜனாதிபதியின் கருத்தை நீக்கிய டுவிட்டருக்கு நைஜீரிய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது.

நைஜீரிய நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் ஜனாதிபதி முகமது புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று தவறான முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 30 மாதங்களாக எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள் என தெரிவித்தார்.

அவரது கருத்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி முகமதுவின் கருத்தை தங்கள் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில், ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் டுவிட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி முகமது புஹாரி பதிவிட்ட டுவிட்டர் கருத்தை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு ஒட்டு மொத்தமாக டுவிட்டர் நிறுவனத்திற்கே நைஜீரியாவில் தடை விதித்துள்ள சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

No comments:

Post a Comment