கிழக்கில் நாளை முதல் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம், கல்முனைப் பிராந்தியத்திற்கு அடுத்த கட்டம் : மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

கிழக்கில் நாளை முதல் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம், கல்முனைப் பிராந்தியத்திற்கு அடுத்த கட்டம் : மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

இலங்கைக்கு கிடைத்த நான்கு லட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 75 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் கொரோனாப் பாதிப்பினடிப்படையில் நாட்டிலுள்ள ஏழு மாகாணங்களுக்கு இந்த 4 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

அதன்படி கிழக்கு வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணத்திற்கு தலா 75 ஆயிரம் தடுப்பூசிகளும் தெற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணத்திற்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறைப் பிராந்தியங்களுக்கு இந்த 75 ஆயிரம் தடுப்பூசிகளும் தலா 25 ஆயிரம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு குறைவாக உள்ள கல்முனைப் பிராந்தியத்திற்கு அடுத்த கட்ட வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (8) முதல் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் குறித்த 75 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கின்றன. செவ்வாயன்று தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. 

கிழக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் கல்முனைப் பிராந்தியம் குறைந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

எனவே முதலில் பாதிக்கப்பட்ட முதல் 3 பிரதேசங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அடுத்த கட்டமாக கல்முனைப் பிராந்தியத்திற்கும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மூன்று தொகுதியினராக வகைப்படுத்தி இத்தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம். இம்மாகாணத்தில் உள்ள தொற்றா நோயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

அத்தோடு அரச ஊழியர்கள், கர்ப்பிணிகள், முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத் தடுப்பூசியினை வழங்க உத்தேசித்துள்ளோம் என்றார்.

(காரைதீவு நிருபர்)

No comments:

Post a Comment