கொழும்பு துறைமுக கடற்பரப்பில் 9.5 கடல் மைல் தொலைவில் தீக்கிரையாகி, தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் அடிப்படைய உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர்கள் சிலரினால் இன்று வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது , மனுதாரர்கள் கப்பல் கைத்தொழில் மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹெவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை, கடல்வள பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நாரா நிறுவனம் என்பவற்றை மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக கடலில் இரசாயன திரவியங்கள் கலக்கப் பெற்றுள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடற்றொழில் துறைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டுள்ள மனுதாரர்கள், அதன் காரணமாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment