(இராஜதுரை ஹஷான்)
பிரதான நிலை தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையினை பயணத்தடை கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவன பிரதானிகளுக்கு விசேட சுற்றறிக்கை ஊடாக அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய தனியார் வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் கையொப்பத்திற்கு அமைய விசேட சுற்றறிக்கை வங்கி மற்றும் நிதி நிறுவன பிரதானிகளுக்கு நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கைக்கு அமைய வங்கி கிளை அல்லது நிதி நிறுவனத்தில் குறைந்த பட்சம் 15 சேவையாளர்களை உள்ளடக்கி சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சேவையினை முன்னெடுக்க முடியும்.
அத்தியாவசிய சேவையாக காணப்படுகின்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நட்வடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு மத்திய வங்கி சுகாதார பணிப்பாளர் நாயகத்திடமும், பொலிஸ்மா அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கி மற்றும் நிதி நிறுவன சேவையில் ஈடுபடும் சேவையாளர்கள் தங்களின் சேவை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சேவைக்கு வருகை தரல் மற்றும் வாகன போக்குவரத்து தொடர்பில் அனுமதியை பெற வேண்டும். இதற்கான அனுமதி பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும். எனவும், வங்கி மற்றும் நிதி நிறுவன சேவையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் முறைமை ஊடாக தங்களின் சேவைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.
வங்கிகளில் 24 மணித்தியாலமும் ஏ.டி.எம் முறைமை ஊடாக வாடிக்கையாளர்கள் பணம் பெறும் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment