மியான்மர் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது ஐ.நா. - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

மியான்மர் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது ஐ.நா.

மியான்மரில் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் இராணுவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “மியான்மர் இராணுவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கயா மாகாணத்தில் பசியாலும், நோயாலும் மக்கள் இறக்கின்றனர். 

மியான்மர் இராணுவ நடவடிக்கை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கயா மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் மியான்மர் இராணுவத்திற்கு அளித்து வரும் உதவிகளை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மியான்மர் இராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்தது முதல் இதுவரை நடந்த போராட்டங்களில் 800 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூகியின், மியான்மரின் ஜனாதிபதி யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு இராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு இராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment