(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் தருணம் இதுவல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ரால் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிதி முகாமைத்துவத்தை நிலையான தன்மையில் பேணுவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதலாம் சுற்று தாக்கத்தின் போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும், இரண்டாம் சுற்றில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 15 பில்லியன் நிதி செலவு செய்யப்பட்டது.
புதுவருட கொவிட் கொத்தணியினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 60 இலட்சம் குடும்பங்ளுக்கு நிவாரணம் வழங்க முதற்கட்டமாக 30 பில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நிவாரண நிதி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
கொவிட்-19 தடுப்பூகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் நிதி கிடையாது என ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.
கொவிட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள தேவையான நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் அரசியல் நோக்கங்களின்றி தாராளமான உதவி செய்யலாம்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு துறைசார் அடிப்படையில் நிவாரணம் வழங்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலையினை மக்கள் மீது ஒருபோதும் சுமத்தமாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment