ரஷ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் வி 65,000 தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இத்தொகுதியில் 15,000 டோஸ்கள் இரண்டாவது டோஸாக செலுத்த ஒதுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் தடுப்பூசி உந்துதலை அதிகரிப்பதற்காக இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் (எஸ்.பி.சி) வழங்கிய கொள்வனவு உத்தரவுக்கு இணங்க, ரஷ்ய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி தொகுதி இதுவாகும்.
இந்த தடுப்பூசிகளை வழங்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யா கடந்த மாதம் ஸ்பூட்னிக் இரண்டு தொகுதி தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது.
முதல் தொகுதி 50,000 தடுப்பூசிகள் மே 04 ஆம் திகதி அன்றும், இரண்டாவது தொகுதி 50,000 தடுப்பூசிகள் மே 27 அன்றும் நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சீன உற்பத்தியான சைனோபார்ம் மேலும் 60 லட்சம் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுவரை 3.1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment