கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரமன்றி, பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் சேமநலன்களுக்காகவும் அரசாங்கம் இதுவரை 286 பில்லியன் ரூபாவை செலவழித்துள்ளதாக அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இந்தத் தொற்று நோயின் முதல் அலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க 80 பில்லியன் ரூபாவும், தமிழ், சிங்கள புது வருட சமயத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க 15 பில்லியன் ரூபாவும், சமகாலத்தில் 35 பில்லியன் ரூபாவும் செலவழிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்று நிலைமை பற்றி ஆராய்வதற்காக மத்திய மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்கள் மத்தியில் இத் தகவலை அறிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாடுகையில் அடுத்த சில நாட்களில், நாட்டில் கிடைக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளின் ஒரு பகுதியை கண்டி மக்களுக்குப் பெற முடியும் என தெரிவித்த அமைச்சர், உலகில் எந்தவொரு நாடும் இந்த தொற்று நோயை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்தவில்லை என்றும் நோய் கட்டுப்பாட்டுக்கு சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில், ஆளுனர் சட்டத்தரணி லலித் யூ. கமகே, அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகே, சீ.பி.ரட்னாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித தென்னகோன், குணதிலக்க ராஜபக்ஷ, வசந்தா யாப்பா பண்டார, உதயன கிரிநிதி கொட, மத்திய மாகாண பிரதான செயலாளர் காமினி ராஜரத்ன, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் மற்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நிஹால் வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எம்.ஏ.அமீனுல்லா)
No comments:
Post a Comment